அரசு விழாக்களுக்குப் பணம் செலவாகும் வேளையில், பாடம் படிக்க வகுப்பறை கேட்கும் மாணவர்கள்!

“அரசு விழாக்களுக்கு கோடிக் கணக்கில் செலவு, அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில்லாமல் தவிப்பு”


தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், மாணவர்கள் வருகை குறைந்து வருகிறது எனக் கூறி அரசு தொடர்ந்து நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளிக்கூடங்களை மூடி வருகிறது. இந்த சூழலில் படிக்க வகுப்பறை இல்லாமல், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே, பெரியதும்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரியதும்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.


இந்த பள்ளிக் கூடத்தில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை வசதி இல்லை. மொத்தம் 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால், பெரும்பாலான நேரங்களில் மரத்தடியிலே அமர்ந்து படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


மழை பெய்தால், வகுப்பறை தாழ்வாரத்தில் அமர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், மாணவர்களால் முறையாகக் கல்வி கற்க முடியவில்லை. இந்த நிலை குறித்து அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையறிந்துள்ளனர்.